Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தெலங்கானாவில் 119 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல்

நவம்பர் 30, 2023 05:25

ஹைதராபாத்: தெலங்கானாவில் மாலை 3 மணி நிலவரப்படி 51.89% வாக்குகள் பதிவாகி உள்ளன. தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தேர்தல் தொடங்கியது.

106 தொகுதிகளுக்கு மாலை 5 மணி வரையும், இடதுசாரி தீவிரவாதம் அதிகமுள்ள 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரையும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் பணியில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.

குறிப்பாக, கிராமப்புறங்களிலும், நகரங்களிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். முதல் முறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

மேலும் மாலை 3 மணி நிலவரப்படி தெலங்கானாவில் 51.89% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக மேடக் தொகுதியில் 69.33% வாக்குகள் பதிவாகி உள்ளது. தலைநகர் ஹைதராபாத்தில் மிகக் குறைவாக 31.17% வாக்குகள் பதிவாகி உள்ளன.

இதையடுத்து, ஹைதராபாத்தில் காவல்துறையினர் வீதி வீதியாகச் சென்று ஒலிபெருக்கி மூலம் பேசி, மக்களை வாக்களிக்க அழைப்பு விடுத்து வருகின்றனர்.

தேர்தல் மோதல் இதனிடையே, ஜங்கோன் தொகுதியில் பூத் எண் 244-ல், பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக இடையே கைகலப்பு ஏற்பட்டது. எனினும், போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இதேபோல், நிஜாமாபாத் மாவட்டத்தின் போதன் நகரில் பிஆர்எஸ் - காங்கிரஸ் தொண்டர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

இப்ராஹிம்பட்டிணம் தொகுதிக்கு உட்பட்ட கானாபூர் கிராமத்தில் பிஆர்எஸ் - காங்கிரஸ் இடையே தகராறு ஏற்பட்டது.

போலீஸார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மற்றபடி, பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

முதல்வர் கே. சந்திரசேகர ராவ், அவரது மகனும் அமைச்சருமான கே.டி. ராமா ராவ், மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, பாஜக எம்பிக்கள் பண்டி சஞ்சய், அரவிந்த் உள்பட 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த தேர்தலில், ஆளும் பாரத் ராஷ்ட்ர சமிதி (பிஆர்எஸ்), காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில், பிஆர்எஸ் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 118 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

ஒரு தொகுதியை கூட்டணி கட்சியான சிபிஐக்கு வழங்கி உள்ளது. பாஜக, நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா உடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

இதில், பாஜக 111 தொகுதிகளிலும், ஜன சேனா 8 தொகுதிளிலும் போட்டியிடுகின்றன.

மிசோரம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநில தேர்தல்கள் கடந் 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 7ம் தேதி முதல் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், கடைசி தேர்தலாக தெலங்கானா தேர்தல் இ்ன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.

எனவே, 5.30 மணிக்குப் பிறகு தேர்தலுக்கப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தடையில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மாலை 6.30 மணி வரை தடை விதித்திருந்த தேர்தல் ஆணையம் தற்போது ஒரு மணி நேரம் முன்னதாகவே கருத்துக்கணிப்புகளை வெளியிட அனுமதி அளித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்